புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக பந்த் நடத்த இடதுசாரிகள், விசிக முடிவு

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டாக பந்த் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவப்பொழிலன், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் முருகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் கூட்டாக அவர்கள் கூறியது: “புதுச்சேரியில் மின் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டண உயர்வுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விவரமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு மின் கட்டண உயர்வும் ஒரு காரணம். ஏனெனில் பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பலவித கட்டணங்களை மக்களுக்குத் தெரியாமல் வசூல் செய்வது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் மக்கள் தந்த பாடத்தை உணராமல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், மின் துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்தக் கோரியும், பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டுமே பணம் வசூலிக்க வேண்டும் எனக் கோரியும், செப்டம்பர் 2-ம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு பிறகு புதுச்சேரியில் பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.