“எனது வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்” – பாஜக கண்டிப்பு, கங்கனா உறுதி

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக எம்.பி கங்கனா ரனாவத். அதற்கு உட்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பினை பெற்றார். பாஜக இது தொடர்பாக விளக்கமும் அளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கங்கனா ரனாவத் தற்போது பேசியுள்ளார். “இனி எனது வார்த்தைகளில் நான் கவனமாக இருப்பேன். கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க இயங்குவேன். ஏனெனில், பாஜகவுக்கு தனிநபர்களை காட்டிலும் தேசம்தான் முக்கியம். கட்சித் தலைமை என்னை கண்டித்தது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனியார் ஊடக நிறுவனத்துடனான நேர்காணல் ஒன்றில் கங்கனா, “விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.” என தெரிவித்தார்.

அவரது அந்த கருத்தை பாஜக கண்டித்தது. மேலும், கங்கனாவுக்கு பாஜக சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன.