அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா புத்தகப்பை, காலணிகள் : முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணாவர்களுக்கு விரைவில் விலையில்லா புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மேநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, ரெயின்கோட் ஆகியவற்றை விலையின்றி தந்துவருகிறோம். கடந்த அரசு எதுவும் செய்யவில்லை. நாம் தற்போது ஆண்டுதோறும் இவற்றை வழங்கி வருகிறோம். அடுத்ததாக, விலையில்லா புத்தகப்பை, காலணிகளையும் விரைவில் தரவுள்ளோம். அதற்கான நிதியும் ஒதுக்கியுள்ளோம்.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மருத்துப் படிப்பில் சேர 10 சதவீத இடஒதுக்கீடு தந்துள்ளோம். அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் குறையை தீர்க்கவே இந்த இடஒதுக்கீட்டைத் தந்துள்ளோம். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே தந்துவிடும். அவர்கள் கல்விக் கட்டணம் இன்றியே மருத்துவம் படிக்கலாம். மருத்துவம் போன்று, அரசுப் பள்ளிகளில் படித்து இதர பாடங்களை கல்லூரிகளில் படிப்போருக்கும் கல்விக்கட்டணத்தைச் செலுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

புதிய தொழில்நுட்பம் வாயிலாக கல்வி கற்பிக்கும் முயற்சியை அரசு கவனத்தில் வைத்துள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். மொத்தம் 157 பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்துள்ளோம். ஏழை குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கிடவே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறோம். புதிய கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால், ரொட்டியும் மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும் தருகிறோம். இன்னும் சத்தான உணவு என்ன தரலாம் என யோசித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினிகளை தந்துள்ளோம். அதற்கு முந்தைய ஆண்டு படித்து கல்லூரிகளில் படிப்போருக்கு மடிக்கணிக்கான நிதியை வங்கியில் செலுத்தவுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.