புதுச்சேரி, காரைக்காலில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அமல் : ஜூன் முதல் கணக்கிட்டு வசூல் – மக்கள் அதிருப்தி

கடும் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இரண்டு மாதங்களுக்கு பிறகு புதுச்சேரி, காரைக்காலில் அமலுக்கு வந்தது. அதேசமயம், அறிவித்தப்படியே இரு மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட தொகையும் ஜூன் 16-ம் தேதி முதல் கணக்கிட்டு வசூலிக்கப்படவுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மின்துறை அமைச்சராகவுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் மின்துறையை தனியார்மயமாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அரசு மீது எழுந்தது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை கடந்த மார்ச்சில் அறிக்கை சமர்பித்ததது. இதையடுத்து கருத்துக் கேட்பு கூட்டமும் நடந்தது. வீட்டு மின் இணைப்பு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம், நிலைக்கட்டணத்தை உயர்த்த அனுமதி கேட்டது.

அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்கட்டண நிலுவைத் தொகை ரூ. 500 கோடியை மின்துறை வசூலிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்தன. போராட்டங்களும் நடந்தது.

இதையடுத்து புதுச்சேரியில் மின்கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மின்துறையானது, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், அறிவிக்கப்பட்டபடி ஜூன் 16-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை வசூலிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.45 ஆக இருந்தது. இனி இது ரூ. 1.95 ஆக வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை ரூ.2.25 ஆக இருந்த மின் கட்டணம் இனி ரூ. 2.70 ஆக வசூலிக்கப்படும். 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25-ல் இருந்து ரூ.4 ஆக உயரும்.

201 முதல் 300 யூனிட் வரையிலான யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40 ஆனது இனி ரூ. 6 ஆகவும் 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கான கட்டணம் ரூ. 6.80-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது. நிலைக்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் ஆகியவற்றுக்கு பழைய கட்டணமே தொடரும். எனினும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலைக்கட்டணம் மாதத்துக்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ.75-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு நிலைக்கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

சிறு விவசாயிகளுக்கு மாதாந்திர நிலைக்கட்டணம் மோட்டாருக்கு ரூ.25-ம், இதர விவசாயிகளுக்கு மாதம் ரூ.100-ம் உயர்ந்துள்ளது. மேலும், குடிசைத்தொழில் உள்ளிட்டவைக்கு கிலோவாட்டுக்கு ரூ.30-ம் நிலைக்கட்டணம் உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு மாதம் கிலோ வாட்டுக்கு ரூ.100-ம், தெருவிளக்கு பயன்பாட்டுக்கான மின்சாரத்த்துக்கு மாதம் ரூ.110-ம் நிலைக்கட்டணம் உயர்ந்துள்ளது.