உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

சமீபத்தில் தான் மேற்கொண்ட உக்ரைன் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைன் சென்றார். அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதித்தார்.

“பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். அமைதி நிலவ வேண்டும். அமைதியான முறையில் மோதலுக்கு தீர்வு காண்பதே மனிதகுலத்துக்குச் சிறந்தது” என தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு வருகை தர ஜெலன்ஸ்கி-க்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, 6 வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளின் தலைவர்களையும் குறுகிய காலத்தில் சந்தித்த ஒரே தலைவர் மோடி என்பதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், தனது உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிபர் புதினுடன் இன்று பேசினேன். ரஷ்யா-உக்ரைன் மோதல் பற்றிய கண்ணோட்டங்கள், எனது சமீபத்திய உக்ரைன் பயணத்தின் புரிதல்கள் குறித்து பகிர்ந்துகொண்டேன். நிலையான மற்றும் அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.