திருச்சி ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ஓடும் ரயிலுக்கும் இடையில் சிக்கியவர் மீட்பு

திருச்சி ரயில் நிலையத்தில் இன்று காலையில், ரயில் நிற்கும் முன்பே இறங்க முயன்ற பயணி ஒருவர் தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலரான அவர் நல்ல வேளையாக பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலரான இவர், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தார். திருச்சி ஜங்ஷனுக்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, ஜெயச்சந்திரன் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தவறி விழுந்து நடைமேடைக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் பயணிகள் ஜெயச்சந்திரனை உடனடியாக மீட்டனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.