மத்திய அரசை எதிர்த்துவிட்டு ‘சத்தமின்றி’ தமிழக அரசில் ஆலோசகர் நியமனம் – தலைமைச் செயலக சங்கம் சாடல்

தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்தை முற்றிலும் கைவிட உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கம் சார்பில் தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் ஜீவன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 40 மாதங்கள் கடந்துவிட்டன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர்கள் நியமனம், தற்போது அனைத்துத் துறைகளிலும் புற்றீசல் போல் பெருகிவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறான நியமனங்கள் இருந்தாலும், பொரும்பாலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளே ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது எந்த வரைமுறையும் இன்றி நியமனங்கள் செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல.

களத்தில் நின்று மக்களுடன் மக்களாக சமூக முன்னேற்றத்துக்கு பாடுபடும் பணியாளர்களின் உழைப்பை புறந்தள்ளி, ஆலோசகர்கள் அறிவுரைப்படி அரசின் கொள்கை முடிவுகள் மேற்கொள்ளும் போக்கு சமூக நீதிக்கு எதிரானது. மத்திய அரசு தனது பணியாளர் தேர்வாணையம் மூலம் இணைச்செயலர், துணை செயலர், இயக்குநர் நிலையில் 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டை புறந்தள்ளி, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப எத்தணித்த போது, தமிழக அரசு அதை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில் எவ்வித சலனமுமின்றி ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது திராவிட மாடலுக்கு எதிரானதாகும்.

நிபுணத்துவம் தேவைப்படும் இடங்களில் ஆலோசகர்களை நியமிப்பது என்ற நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும் கணக்கிலடங்கா நியமனங்ககள் சமீபகாலமாக நடைபெறுகிறது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்கள், சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலம் பல்வேறு வழிகளில் மாநில அரசில் உட்புகுவது என்பது மிகவும் அபாயகரமானதாகும்.

தற்போது தமிழக அரசில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஆலோசகர்கள் நியமனங்கள், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு நிர்வாகத்தை நடத்த மறைமுகமாக உதவி வருகிறது. இப்போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவை சீரழித்துவிடும். இந்த நியமனங்கள் அனைத்துமே அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பது மட்டுமே வரவேற்கத்தக்கது.

எனவே, திராவிட மாடல் ஆட்சியில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காக்கும் பணியில் சமரசம் ஏதுமின்றி பணியாற்றி வரும் தமிழக முதல்வர், ஆலோசகர் நியமனங்களை முற்றிலும் கைவிட உத்தரவிட வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.