“நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சிராக் பஸ்வான் வலியுறுத்தல்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், “நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதில் எங்களது லோக் ஜன சக்தி உறுதியாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் முன்னேற வேண்டுமென்பதே பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

அந்த மாதிரியான சூழலில் சாதி அடிப்படியிலான மக்கள் தொகை விவரம் அரசுக்கு அவசியம் தேவை. அதன் மூலம் உரிய தொகையை ஒதுக்கீடு செய்ய முடியும் என நம்புகிறோம்” என அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசுத் துறைகளின் செயலாளர்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் (‘லேட்டரல் என்ட்ரி’) தொடர்பாகவும் தனது எதிர்ப்பை அவர் தெரிவித்திருந்தார். மேலும், இது தனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசுக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனம் வலுக்க நேரடி நியமனத்தை அரசு ரத்து செய்தது. இந்நிலையில் சிராக் பஸ்வான் இப்போது சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திப் பேசியுள்ளார்.