கனமழையால் முடங்கிய குஜராத் : வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரம்

குஜராத் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மோர்பி மாவட்டத்தில் டிராக்டர் ட்ராலி ஒன்று 7 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த 7 பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு முதல்வர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். தெற்கு குஜராத்தில் உள்ள வல்சட், தபி, நவ்ஸரி, சூரத், நர்மதா, பஞ்சமஹாத் போன்ற பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் கேர்கம் தாலுகாவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி கேர்காம் தாலுகாவில் 356 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நர்மதா, சவுரஷ்ட்ரா, ராஜ்கோட், தபி, மஹிசாகர், மோர்பி, தாஹோத், வதோதரா என 8 மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தெற்கு குஜராத் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையல் அப்பகுதியின் ஆண்டு சராசரி மழையைவிட 105% அதிகமாக மழை பொழிந்துள்ளது.

குஜராத் உள்துறை செயலர் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு வெள்ள பாதிப்புகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கனமழை காரணாமாக சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டம் 135.30 மீட்டராக உயர்ந்துள்ளது. குஜராத்தின் 206 நீர்த்தேக்கங்களில் மொத்தம் 3.64 லட்சம் க்யூபிக் அடி நீர் நிறைந்துள்ளது. இது மொத்த கொள்ளளவின் 65 சதவீதம் ஆகும். 75 நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அபாய எல்லையை நெருங்கியுள்ளது. 15 நீர்த்தேக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மழை வெள்ள பாதிப்பால் முடங்கிய சாலைகளை சீரமைப்பதையும், தடைபட்ட மின்சாரத்தை திரும்ப வழங்குவதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திரா படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று கனமழையும், ஆக.26, 27 தேதிகளில் தெற்கு ராஜஸ்தானில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த இரு மாநிலங்களுடன் குஜராத், கோவா, மகாராஷ்டிராவிலும் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.