“பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த நிலையை அடைய முயற்சிப்போம்” – எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர்

“ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு தொடக்கமே. தொடர்ந்து, பழைய பென்சன் திட்டத்தில் இருந்த நிலையை அடைய முயற்சி எடுப்போம்” என்று அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் என்.கண்ணையா கூறியுள்ளார்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவரும், எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளருமான கண்ணையா சென்னையில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: “மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, 50 சதவீதம் அடிப்படை சம்பளத்தை டிஏ-வோடு பென்ஷனாக பெற்றுவந்த முறையானது கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாற்றப்பட்டது. அதன்பிறகு, புதிய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ, அகில இந்திய ரயில்வே சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், மற்ற மாநில அரசு ஊழியர்களும், ஜேசிஎம் நிலைக்குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு, கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பேரணிகள், எதிர்ப்பு தினங்கள், தொடர் உண்ணாவிரதங்கள் என பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். இறுதியாக, கடந்த 24-ம் தேதி புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்தையில், புதிய பென்ஷன் திட்டத்துக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது, எங்களின் 20 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. எங்களுக்கு முதலில் இருந்த பழைய பென்ஷன் திட்டம் வேண்டும். அதை கொடுப்பார்களா என்பது தெரியவில்லை.

தற்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொடுத்து உள்ளனர். ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் சேர்ந்தோருக்கு 25 ஆண்டு சேவை முடிந்து, ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு கடைசி 12 மாத அடிப்படை சம்பளத்தில் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக தரப்படும். இவர்களுக்கு மத்திய அரசு தரும் பங்களிப்பு தொகை 14 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும். இந்த பென்சன் திட்டம் ஒரு தொடக்கம் ஆகும். சிலருக்கு வேறுபட்ட கருத்து இருக்கலாம். தொடர்ந்து, பல கட்ட நடவடிக்கை மேற்கொண்டு படிப்படியாக மாற்றுவோம். கடைசியில், பழைய பென்சன் திட்டம் என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு கொண்டுவருவோம்.

தற்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள உத்தரவாத பென்ஷன் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பான 10 சதவீதத்தை நீக்கும் வரையிலும், பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை உத்தரவாத பென்ஷன் திட்டத்தில் நிறைவேற்றும் வரையிலும் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் ரயில்வே தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடி வெல்வோம். ரயில்வேயில் 15 ஆண்டுகளாக பணிபுரியும் மற்ற மாநிலங்களின் ஊழியர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றவும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்று கூறினார். இந்தச் சந்திப்பின் போது, எஸ்ஆர்எம்யூ தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வர்லால், சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.