திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரவீன் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஹரிபிரசாத், பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திருவையாறு 15-ம் மண்டபம் அய்யப்பன்கோயில் படித்துறை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய 2 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து இருவரின் அலறல் சத்தம் கேட்டு சக நண்பர்கள் உடனே கரைக்கு வந்து பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட ஹரிபிரசாத், பிரவீன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து சிறுவர்களை தேடிய நிலையில், இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 சிறுவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.