மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கை தேவை : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். 2024-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.