கும்பகோணத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு : 3 பேர் கைது

கும்பகோணம், மேலக்காவேரியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கண்டறிந்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

கும்பகோணம், மேலக்காவேரி, கே.எம்.எஸ். நகரில், வெளி மாநில சாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து டாஸ்மாக் பாட்டிலில் நிரப்பி, அதில் அரசு முத்திரை ஒட்டி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கும்பகோணம் மேலக்காவேரி, கே.எம்.எஸ். நகர், மாதா கோயில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில், புதுச்சேரி மாநில சாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து, கலர் சாயத்தை கலந்து, போலியாக தயாரித்து அரசு முத்திரை ஒட்டி டாஸ்மார்க் பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர், அந்த வீட்டில் இருந்த செரிப் மகன் சையது இப்ராஹிம் (46), உள்ளுரைச் சேர்ந்த அன்பு செல்வன், திருவிடைமருதூர் வட்டம், குறிச்சியை சேர்ந்த குளஞ்சிநாதன் ஆகிய 3 பேரை கைது செய்து, அங்கிருந்த 125 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 180 மி.லி. அளவு கொண்ட 560 பாட்டில்கள், பாட்டில்களுக்கு மூடி போடும் இயந்திரமும், போலியாக தயாரித்து வைத்திருந்த அரசு முத்திரை ஸ்டிக்கர்கள், டாஸ்மார்க் பாட்டில் லேபில் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய காரைக்காலை சேர்ந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.