டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். நீண்ட காலமாக டிஎன்பிஎஸ்சி-க்கு தலைவர் இல்லாது இருந்து வந்த நிலையில், அதன் மூத்த உறுப்பினரான முனியநாதன் பொறுப்பு தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான்லூயிஸ் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

யுபிஎஸ்சி-யை போல் டிஎன்பிஎஸ்சியும் வருடாந்திர தேர்வு அட்டவணையை முறையாகப் பின்பற்றி குறித்த காலத்தில் தேர்வுகளை நடத்தி தேர்வு முடிவுகளையும் குறித்த காலத்துக்குள் வெளியிட வேண்டும் என்றும், குறைவான பணியிடங்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெகுவிரைவாக வெளியிட வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் புதிய தலைவரிடம் எதிர்பார்க்கிறார்கள்.