கொல்கத்தா கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் ‘சைக்கோ அனாலிஸிஸ்’ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையின் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராய்க்கு நடத்தப்பட்ட மனோதத்துவ பரிசோதனையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சோதனை அறிக்கையின் விவரம் வருமாறு: சஞ்சாய் ராய் பார்ன் படங்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதில் அவர் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு மிருகத்தனமான இச்சைகள் இருந்துள்ளன. அவர் எப்போதும் எந்தக் குற்றம் குறித்தும் கவலையோ, குற்ற உணர்வோ கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ கோரிக்கைக்கு இணங்க சஞ்சய் ராய்க்கு மனோதத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியளிக்கின்றன.

முன்னதாக சஞ்சய் ராயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சிபிஐ அதிகாரி ஒருவர், “சஞ்சய் ராயிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது அவர் எவ்வித வருத்தமும் இல்லாமல் நடந்தவற்றை சிறு நுணுக்கமான தகவல்களையும் விடாமல் எங்களிடம் தெரிவித்தார். அவர் அந்தச் சம்வபம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக எங்களுக்குத் தோன்றவில்லை” எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேட்டியில் அந்த அதிகாரி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பின்னிரவில் சஞ்சய் ராய் வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்குச் சென்றதும் விசரணையில் தெரியவந்துள்ளது. மிகுந்த போதையில் இருந்த சஞ்சய் ராய் ஒரு பெண்ணிடம் நிர்வாண புகைப்படம் கோரியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போவானிபோர் பகுதியில் உள்ள சஞ்சய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சக பணியாளர்களிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.