சிவகங்கை அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்து, ஆக.19-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

ஆக. 20-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசலை பூஜையும் நடைபெற்றன. இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பிச்சைக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்தனர்.