“வெறும் கட்சிக் கொடி அல்ல, வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடி” – விஜய் பேச்சு

“தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக நான் பார்க்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக கொடியை அறிமுகம் செய்த அக்கட்சியின் தலைவர் விஜய் பின்னர் மேடையில் பேசியதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.

புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.

இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசினார்.

முதலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பின்வருமாறு: “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.