ஈரோடு கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் – முதல்வர் உத்தரவு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் ‘அ’ கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜீயின் மகன் செந்தில்குமார் மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அஜீத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.