‘‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை’’ – ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் ராகுல் உருக்கம்

“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமிக்குச் சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடி அவர் மலர்தூவி பிரார்த்தனை செய்தார். பின்னர், நினைவிடத்தை வலம் வந்தார். அவரோடு, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தனது தந்தையைப் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “அவர் இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜிவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், பாரத் ரத்னா ராஜிவ் காந்திக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். நவீன தொழில்நுட்பத்தையும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் சகாப்தத்தையும் தோற்றுவித்தவர் அவர்.

மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் முற்போக்கான இந்தியா ஆகிய அரசியலமைப்பு மதிப்புகளுக்கான அவரது அர்ப்பணிப்பு ஒரு வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பில் தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.