கவிஞர் நா.முத்துநிலவன் எழுதிய “தமிழ் இனிது” நூல் வெளியீட்டு விழா

கவிஞர் நா.முத்துநிலவன் இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய தொடரின் தொகுப்பான “தமிழ் இனிது” நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் அமெரிக்காவில் FeTNA நடத்திய தமிழ் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்தமைக்கான பாராட்டு விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், வீதி கலை இலக்கியக்களம் மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தின.

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் தலைவர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். வீதி ஒருங்கிணைப்பாளர் மு.கீதா வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா நூலை வெளியிட, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை பெற்றுக்கொண்டார்.

தமுஎகச மாநில துணைத்தலைவர் ஆர்.நீலா நூல் அறிமுகம் செய்தார். மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன் தொடக்க உரை வழங்கினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் மா.ஸ்டாலின் சரவணன், மருத்துவர் ச.ராமதாஸ், வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலட்சுமி, புலவர் கும.திருப்பதி, பத்திரிக்கையாளர் சு.மதியழகன், பேராசிரியர் விஸ்வநாதன், கிருஷ்ணவரதராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூலாசிரியர் நா.முத்துநிலவன் ஏற்புரை வழங்கினார். தமுஎகச மாவட்டத் துணைச் செயலாளர் பீர்முகமது நன்றியுரை கூறினார். வீதி கலை இலக்கிய களம் செயற்பாட்டாளர் மைதிலி கஸ்தூரிரங்கன் நிகழ்வை நெறியாள்கை செய்தார்.