அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 679 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம், அயன் ராயம்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50,000 கடனுதவி மற்றும் இலுப்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.3,60,200 மதிப்பில் பயிர் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.4,10,200 மதிப்பிலான கடனுதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் டாப்செட்கோ நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பில்  என மொத்தம் ரூ.3,50,000 மதிப்பில் மானியத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர்   பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமா மகேஸ்வரன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.