“உடைக்க முடியாத அன்பு” – ராகுல், பிரியங்காவின் ரக்‌ஷா பந்தன் பாசப் பகிர்வு

ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இது அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும்” என்று வாழ்த்தியுள்ளார்.