இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.

கடந்த ஜுன் 30 பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அவருடன் சேர்த்து கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் ஆகிய 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப்படகுகளை பறி முதல் செய்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 9 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த 16 மீனவர்கள் மீதான வழக்கு கடந்த ஆகஸ்ட் 8 அன்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரும் மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். எனினும் அவர்களது படகை நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களில், ஒரு விசைப்படகில் படகில் இருந்த 4 மீனவர்களில் இருவரை விடுதலை செய்ததுடன், அந்த படகின் உரிமையாளர் இருந்ததால் உரிமையாளருக்கும், படகு ஓட்டுநருக்கும் அபராதமும், தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். மேலும், இரண்டாவது படகில் இருந்த 5 மீனவர்களில் படகு ஓட்டுநரும் உரிமையாளரும் ஒரே நபர் என்பதால் அவருக்கு அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

தண்டணைக்கு உள்ளானவர்கள் தவிர விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்கள் நேற்று மாலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் மீன்வளத் துறையினர் மூலம் தனி வாகனங்கள் மூலம் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.