நெல்லையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு தொழில் கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 5சி/5பி, சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 2-வது மாடி, திருவனந்தபுரம் ரோடு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி-627003) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.1.50 கோடி மற்றும் இதர மானியங்கள்) மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். மேலும், NEEDS திட்ட கடனுக்கு 3 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தரப்படும். நவீன ஆலை மற்றும் நவீன இயந்திரங்கள் விரிவாக்கத்துக்கு 5 சதவீத வட்டி மானியம் பெற்றுத் தரப்படும். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 35 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் 6 சதவீத வட்டி மானியம் பெற்றுத்தரப்படும்.

இந்த முகாமில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து ஆய்வு கட்டண தள்ளுபடியை பெற்று தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு 0462-250203894443 9683094443 96881 என்ற எண்களிலும், கிளை மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் திருநெல்வேலி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.