கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வன்முறை : கைது எண்ணிக்கை 19 ஆக உயர்வு

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையைக் கண்டித்து நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஆர்.ஜி.கர் மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து கடந்த புதன்கிழமை கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையை தாக்கிய மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் நேற்று தெரிவித்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். அதனடிப்படையில் தற்போதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

ஆர்.ஜி கர் மருத்துவமனை தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் தலைமையிலான அமர்வு முன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திடீரென சுமார் 7 ஆயிரம் போராட்டக்காரர்கள் கூடிவிட்டதாகத் தெரிவித்தனர். அப்போது, 7 ஆயிரம் பேர் கூடுவது குறித்து காவல்துறைக்கு தெரியாமல் இருந்து நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் நடந்து வந்திருக்க முடியாது. இது மாநில அரசின் முழு தோல்வியையே காட்டுகிறது என நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.

உயிரிழந்த பெண் மருத்துவர் குறித்த எந்த தகவலும் வெளியே கசியக்கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை ரகசிய ஆவணமாக கருதி சீல் வைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பத்திரிகைகள் ஊடகங்கள் என யாரும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என முன்னதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.