பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையின் 2-வது பசுமை வெளி விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தில் 752-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தக் கிராம பொதுமக்கள் கடந்த ஏழு முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் 6 முறை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து சுதந்திர தினத்தையொட்டி இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் எட்டாவது முறையாக பரந்தூர் விமான நிலையத்தை இந்தப் பகுதியில் அமைக்கக் கூடாது என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் விமான நிலையம் அமைய உள்ள மற்ற பகுதிகளில் நடைபெறுவதாகவும், ஆனால் ஏகானபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஏகனாபுரம் கிராமமத்தில் அந்தப் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறுகையில், “தொடர்ந்து 8-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அரசு விமான நிலையத்துக்காக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது. மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.