சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தின்போது காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். 3 பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த முறை வீர, தீர செயலுக்கான விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. இந்த முறை வீர, தீர செயலுக்கான விருதை தெலுங்கானாவை சேர்ந்த காவலர் ஒருவர் பெறுகிறார். எனினும், மற்ற இரண்டு பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் விருதுகள் பெறுகின்றனர்.

வன்னியபெருமாள், அபின் தினேஷ் மோதக் ஆகிய இருவருக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திறம்பட சேவையாற்றிய பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஐஜி கண்ணன், ஐஜி பாபு, ஆணையர் பிரவீன்குமார், எஸ்பிக்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாம்ளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பிக்கள் டில்லி பாபு, மனோகரன், சங்கு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களில், தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர், சந்திரமோகன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த 3 எஸ்.ஐக்களுக்கும் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக இதேபோல தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களும் 3 பிரிவில் விருதுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது. இதேபோல் மத்திய உள்துறைக்கான சிறப்பு விருது தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளாட்டூர் கமாண்டர் கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பினுக்கு உள்துறை விருதுகள் வழங்கப்படவுள்ளது.