விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பத்தில் தேசிய கொடியேற்றி ஊர்வலம் செல்ல முயற்சி : பாஜகவினர் கைது

நாட்டின் 78வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரை தேசிய கொடியேந்தி இருசக்கர வாகனப் பேரணி நடைபெற இருந்தது.

ஆனால், இருசக்கர வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், இன்று தடையை மீறி பேரணி செல்ல தயாரான பாஜகவினர், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கலிவரதன், இளைஞர் சங்கத்தலைவர் சுரேஷ் தலைமையில் பாஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஊர்வலமாகச் செல்ல முயன்ற 30-க்கும் மேற்பட்ட பாஜகவினரை டிஎஸ்பி-யான சுரேஷ் தலைமையிலான விழுப்புரம் தாலுகா போலீஸார் கைது செய்து 50 மீட்டர் தொலைவில் இருந்த திருமண மண்டபத்திற்கு பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, “சுமார் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு நடக்க வைத்தே அழைத்து செல்லலாமே” என்று போலீஸாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அப்படி அழைத்துச் சென்றால் அதுவே ஊர்வலத்திற்கு அனுமதித்தது போலாகிவிடும் என்பதால் தான் பேருந்து மூலம் அழைத்துச் செல்கிறோம்” என்று போலீஸார் கூறினர்.