வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு : தற்கொலையா என விசாரணை

வேதாரண்யம் அருகே மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூரில் வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மு.குமரேசன் (35), புவனேஸ்வரி (28) தம்பதி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமானது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு கடன் தொல்லையும் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையில், வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி சடலமாகக் கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கரியாப்பட்டினம் போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.