அரியலூரில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூரில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை  உருவாக்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி  நடைபெற்றது.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கம் முன்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர். பேரணி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியே சென்று,  அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையில் நிறைவடைந்தது.  விழிப்புணர்வு பேரணியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.