துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் : மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் 

தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சி பெறும். உயர் நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும்.

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே. ஆனால், கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில், உயர்கல்வி மற்றும் தொழில் கல்விக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் எல்லாம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, போதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல், ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாமல், தேர்வுகளைக்கூட உரிய நேரத்தில் நடத்த முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கான துணை வேந்தர்கள் பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. தேடுதல் குழுவில் பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி நியமிப்பது தொடர்பான பிரச்சனை இருப்பதால், துணை வேந்தர்கள் நியமனம் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது.

துணைவேந்தர்கள் இல்லாத இந்தச் சூழ்நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர் தலைமையிலான மூன்று நபர் குழு மேற்படி பல்கலைக்கழகங்களை நடத்தி வருகிறது. தற்போது இந்தப் பல்கலைக்கழகங்களின் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. இது தவிர பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பணி நீட்டிப்பில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் வருங்காலங்களில் பல பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் இல்லாத சூழ்நிலை உருவாகும்.

ஒரு பல்கலைக்கழகத்தின் உயிர்நாடியாக விளங்குபவர் துணைவேந்தர்தான். துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகம் தலையில்லாத பல்கலைக்கழகம் என்பதோடு இது பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்தையும் கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே ஆண்டுக் கணக்கில் துணைவேந்தர்களை நியமிக்காமல் இருப்பது என்பது உயர் கல்வியை பின்னுக்குத் தள்ளும் செயலாகும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை அப்போதைக்கப்போது நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என அறிகிறேன். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைந்து முடிக்கவும் மாணவ மாணவியரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மேதகு ஆளுநருடன் கலந்துபேசி தற்போது காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்பவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.