அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48 ). பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42 ). இவர்கள் இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவகுமார் லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.