தேர்வு மைய குளறுபடிகள் ‘நீட்’ ரத்து செய்ய இன்னொரு எடுத்துக்காட்டு : அன்புமணி

“இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு – காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்தது. அப்போதும் தமக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி அங்கு தேர்வு எழுதச் சென்ற பின்னர், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் வெறுங்கையுடன் திரும்பிய தமக்கு பெரும் செலவு ஏற்பட்டதாகவும் அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார். ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் 4 மையங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் உறுதியளித்திருந்தது. ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு மீண்டும் காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பாமக வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு மையம் அறிவித்தது. ஆனால், தருமபுரி மாணவி உள்ளிட்ட பலருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்படவே இல்லை.

பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது. இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று அன்புமணி பதிவிட்டுள்ளார்.