சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமன முறைகேடு புகார் : உரிய விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஹ்மத்துல்லா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி கடந்த 2018-ம் ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியர்களின் பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விண்ணப்பதாரர்கள் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் கடந்த 2018-ம் ஆண்டு இதுதொடர்பாக அளித்த புகார் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.