வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த நீலகிரி தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணகுமார் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம். சோங்கோடு கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) என்பவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றிவந்த நிலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்யாணகுமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காலம்சென்ற கல்யாணகுமார் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கூடலூரைச் சேர்ந்த கட்டுமானப்பணி தொழிலாளரி காளிதாஸின் குடும்பத்துக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கி உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.