சிவனுடன் சேர்த்து பிரதமர் மோடி சிலையையும் தூக்கிய காவடிகள் : டெல்லி சென்று நேரில் ஆசி பெற விருப்பம்

தற்போது நடைபெறும் ஸ்ரவண மாதம் காரணமாக, வட மாநிலங்களில் பொதுமக்கள் காவடிகள் ஏந்தி தம் வேண்டுதலை முடிக்கின்றனர். இதில், உத்தராகண்டின் ஹரித்துவாரில் இரண்டு இளைஞர்கள், சிவனுடன் சேர்த்து பிரதமர் நரேந்திர மோடியின் சிலையையும் காவடியாகத் தூக்கிச் சென்றது பலரையும் வியப்படையச் செய்தது.

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தை சேர்ந்த இளைஞர்கள் உபேந்திர தோமர் மற்றும் சோனு தியாகி. நண்பர்களான இந்த இருவரும் உத்தராகண்டின் ஹரித்துவாரிலுள்ள கங்கையின் ஹர் கி பேடிகரைக்கு இன்று வந்தனர். அங்கு புனித நீராடி விட்டு, கங்கை நீரை கலசத்தில் எடுத்தவர்கள் இதர பக்தர்களை போல் காவடி எடுக்கவில்லை. இதற்கு மாறாக காவடியாக சிவன் மற்றும் பிரதமர் மோடியின் உருவச் சிலைகளை தங்களது தோள்களில் அமர வைத்துக்கொண்டு நடக்கத் துவங்கினர். இருவரது காவடி ஊரவலத்தில் மேலும் ஆறு பேர் பின்தொடர்கின்றனர்.

பாக்பத்தின் தோமரும், தியாகியும் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்களாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் ஸ்ரவண மாதத்தில் தூக்கும் காவடிகளில் இந்துக்களின் கடவுளாக சிவன் சிலையுடன் பிரதமர் மோடியின் சிலையையும் தூக்கி மகிழ்ந்தனர். இந்தக் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைத்ததுடன் இருவர் குறித்தும் விசாரித்து அறியத் தூண்டியது. காவடியுடன் டெல்லிக்கும் சென்று இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெறவும் விரும்புவதாகக் கூறுகின்றனர். இதற்காக, தமது கடவுளான சிவன் தங்கள் விருப்பதை பூர்த்தி செய்வார் எனவும் அவர்கள் நம்புகின்றனர். இதுபோல், பலவகைகளை காவடிகளாக எடுத்துச் செல்வது வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தில் பார்க்கக் கூடிய காட்சிகளாக அமைந்துள்ளது.