12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த இவர், ஊட்டியில் பள்ளிக்கல்வியையும் சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார். இவர், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதிகாரியாக அறியப்படுகிறார்.

ராஜஸ்தான் ஆளுநராக மராட்டிய சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் முர்மு. பஞ்சாப் ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவும், அசாம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூரையும் சேர்த்து கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ் கங்வார், சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் தேகாவும், மேகாலயா ஆளுநராக விஜயசங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளார்.