பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முடிவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரையும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29-ம்தேதி முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22-ம்தேதி தொடங்கியது. இக்கலந்தாய்வை உயர்கல்வித் துறைஅமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் அலுவலகத்தில் தொடங்கிவைத்தார். 22 மற்றும் 23-ம் தேதி சிறப்புபிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின.

கல்லூரியை தேர்வு செய்து உறுதிபடுத்திய மாணவர்களுக்கு 23-ம் தேதி இரவு 9 மணிக்கு இணையவழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பொதுப் பிரிவினருக்கான (அகாடமிக்) கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. செப்டம்பர் 3-ம்தேதி நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட இருக்கிறது. அதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் இக்கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படும். கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்தார்.