“திமுக ஒரு பிரைவேட் கம்பெனி, ஸ்டாலின்தான் மேனேஜர்” – செல்லூர் ராஜூ விமர்சனம்

‘‘திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால் உதயநிதியும், இன்பநிதியும் மேனேஜர்களாக வருவார்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ‘‘மக்களை ஏமாற்றவே மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்க்கு எதிராக திமுக போராட்டம் நடத்துகிறது. திமுக சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை பார்க்காத திமுக, குடும்ப நலனை மட்டுமே பார்க்கிறது. 40 எம்பி-க்கள் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்தார்களா? திமுக ஆட்சியில் தான் ‘நீட்’ வந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா? கச்சத்தீவு, காவிரியை மீட்டெடுத்திருக்கலாமே.

மக்கள் பிரச்சினையை விட்டு விட்டு செங்கோலைப் பற்றி பேசுகிறார் சு.வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி பேசவில்லை. எல்லாமே மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நடத்தும் நாடகம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அம்மா உணவகங்கள் உட்பட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் உயர் கல்வி நிறுவனங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் எத்தனை உயர் கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டது என்று சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னிலையில் இருந்தது. திமுகவில் உயர் பதவிகளுக்கு வாரிசுகள் மட்டுமே வர முடியும்.

திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி கிடையாது. திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது. திமுக கம்பெனி மேனேஜராக ஸ்டாலின் செயல்படுகிறார். அவருக்குப் பின்னர் உதயநிதியும், இன்பநிதியும் மேனேஜர் பதவிக்கு வருவார்கள். திமுக எதிர்க்கட்சி என்றால் கருப்புக் குடை பிடிக்கிறது, ஆளும் கட்சி என்றால் வெள்ளைக் குடை பிடிக்கிறது. நடிகர் விஜய் முதலில் கட்சி தொடங்கட்டும், அவரின் செயல்பாடுகளை அப்புறம் பார்க்கலாம்’’ என்று செல்லூர் ராஜூ கூறினார்.