“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன்” – மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டிற்கு எதிராக நிதி ஆயோக் கூட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அந்த கட்சியின் தலைவர்களின் அணுகுமுறை, வங்கத்தை பிரிக்க நினைக்கும் வகையில் உள்ளது. பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் வங்கத்தை பிரிக்க பாஜகவின் பல்வேறு தலைவர்கள் பல்வேறு அறிக்கைகளை விடுகிறார்கள். நாங்கள் அதனை கண்டிக்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் நாங்கள் எங்கள் குரலை பதிவு செய்ய விரும்புகிறோம். எனவே, நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்” என தெரிவித்தார்.

நிதி ஆயோக் கூட்டம் நாளை (ஜூலை 27) நடைபெற உள்ள நிலையில், இன்று டெல்லி வரும் மம்தா பானர்ஜி, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., சுதிப் பந்தோபாத்யாய் இதனைத் தெரிவித்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக சென்னையில் புறக்கணிப்பு முடிவை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.