பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் வாதிட அனுமதி

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 2017-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக அப்போதைய உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு, கடந்த திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்த்து. ஆனால், மேல் முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், தங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். மனுராஜ், “இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ-வான கு.க.செல்வம் தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். கு.க.செல்வம் காலமாகிவிட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், காலமாகிவிட்ட கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.