திருச்சியில் தவெக-வின் முதல் அரசியல் மாநாடு : 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க ஏற்பாடு

நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடத்தப்படவுள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது போன்ற பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். மேலும், கட்சியில் யாருக்கெல்லாம், எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது குறித்தும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், தமிழக வெற்றிக் கழகத்தில் எப்படியாவது பதவிகளை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று மக்கள் பணிகள், நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், தவெக கட்சி தொடங்கப்பட்ட பிறகு நிர்வாகிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர். முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபயணங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார். மாநாட்டை பொறுத்தவரை மதுரையில் நடத்த இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், திருச்சி மாவட்டம் சிறுகனூர் என்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஆய்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

இதனால், மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் இப்போதே கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், திரைப்படம் வெளியான பிறகு மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் மாநாடு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.