சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணை தள்ளிவைப்பு

முந்தைய அதிமுக ஆட்சியில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூலை 25-க்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதையடுத்து, உரிமைக்குழு, திமுக எம்எல்ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 25-க்கு தள்ளி வைத்துள்ளனர்.