வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, “கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் இதுநாள்வரை இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று வாதிட்டார். அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளது. எனவே, அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், இதே விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.