“வங்கதேசத்தில் உள்ள தமிழக மாணவர்களை அழைத்துவர தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” – ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள் வங்கதேசத்தில் உள்ள தமிழக மாணவர்களை தமிழகத்துக்கு பத்திரமாக அழைத்துவர தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதன் காரணமாக இந்திய மாணவர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். மத்திய அரசு வங்கதேசத்தில் உள்ள தமிழக மாணவர்களை பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்திய மாணவர்களை பத்திரமாக அவரவர் மாநிலத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு கல்வி பயின்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மாணவர்கள் அவர்கள் படிக்கின்ற கல்லூரி பேருந்தின் மூலமாக இந்திய எல்லைப் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

முதற்கட்டமாக 49 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர். மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே வங்கதேசத்தில் சிரமத்தில் இருக்கும் மாணவர்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்து வரவும், வங்கதேசத்தில் பிரச்சினை முடிந்த பிறகு மீண்டும் தமிழக மாணவர்கள் வங்கதேசம் சென்று கல்வி பயிலவும் மத்திய மாநில அரசுகள் உதவிக்கரமாக செயல்பட வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.