மதகுகளில் பழைய மோட்டார்கள் – அமராவதி அணை பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பி காணப்படுவதால், அமராவதி அணை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. உயரம் 90 அடியும், சுமார் 4 டிஎம்சி கொள்ளளவும், 10 சதுர கி.மீ. பரப்பளவும் உடையது. பாம்பாறு, தேனாறு, சிலந்தியாறு, சின்னாறு ஆகியவற்றை நீராதாரமாக கொண்டது. அணையின் மூலமாக, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 55,000 ஏக்கர் பயன்பெறுகிறது. தாராபுரம், கரூர் மாவட்டங்களுக்குட்பட்டு சுமார் 110 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, விவசாயிகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 7000 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அணையின் மதகுகள், அங்கு பொருத்தப்பட்டுள்ள பழமையான மோட்டார், நிரந்தர தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாதது என பல்வேறு விஷயங்கள் அணையின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: அணையில் 36 அடி உயரம் 25 அடி அகலமுடைய 9 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாக, கடந்த சில ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மதகின் அடிப்பாகமும் நீர் கசியாமல் தடுக்க, ரப்பர் ஷீல்டு பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வோர் ஆண்டும் புதிதாக மாற்றியமைக்க வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன. அணையின் மதகுகளை இயக்கும் மோட்டார் 68 ஆண்டுகள் பழமையானது. மேற்கு ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்டது. இதன் உதிரிபாகங்கள் கிடைக்காமல், ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முன்னர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் பணியில் இருந்தனர். காலப்போக்கில் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஐடிஐ-யில் பிட்டர் பயிற்சி பெற்றவர்கள் ஆபரேட்டர்களாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு பணியில் இருந்தவர்கள் ஓய்வுபெற்றே 20 ஆண்டுகளாகிறது. இதுவரை பிட்டர் கல்வி பயின்ற நிரந்தர பணியாளர் நியமிக்கப்படவில்லை. மாறாக, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களே பணியில் உள்ளனர். 9 மதகுகளும் திறக்கப்பட்டால் விநாடிக்கு 1,40,000 கன அடி தண்ணீர் வெளியேறும். 1968-ம் ஆண்டில் 1,00,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன் பின் 2018-ம் ஆண்டில் விநாடிக்கு 33,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அப்போது, தாராபுரம் பகுதியில் 2 பாலங்கள், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஏராளமான தடுப்பணைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முறையான பராமரிப்பு இல்லாததால், பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் உலக வங்கி நிதி உதவியுடன் பிஏபி திட்டத்திலுள்ள அணைகளின் மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமராவதி அணையின் மதகுகளையும் சீரமைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

அமராவதி அணை செயற்பொறியாளர் கோபியிடம் கேட்டபோது, ‘‘அணையின் பாதுகாப்பில் எந்தவித அச்சமும் தேவையில்லை. மதகுகளின் ரப்பர் ஷீல்டுகள், மோட்டார் உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உரிய பயிற்சி பெற்ற தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்’’ என்றார்.