கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புத்தகத் திருவிழாவிற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய ஏழாவது புத்தகத் திருவிழாவிற்கான ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை ஒன்றிய துணை வட்டாட்சியர் ராஜாதுரை  தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் துரையரசன் அனைவரையும் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கந்தர்வகோட்டை ரோட்டரி சங்க செயலாளர் வெங்கடேஷ்குமார், பாரத் ரோட்டரி சங்க  தலைவர் பீமாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கந்தர்வக்கோட்டை துணை வட்டாட்சியர் ராஜாதுரை  தலைமை  வகித்து பேசும்பொழுது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய புத்தக திருவிழாவில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். அனைவரும் புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும். தங்களுடைய குழந்தைகளுக்கும், ஊர் நூலங்களுக்கும் புத்தகங்களை வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று பேசினார்.

புத்தக திருவிழாவிற்கான கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் முனைவர் பிச்சைமுத்து கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவில் ஒன்றியத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். பள்ளி குழந்தைகளை தினந்தோறும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

கந்தர்வகோட்டை  வட்டாரச் செயலாளர் ரஹ்மத்துல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். கந்தர்வகோட்டை கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் புத்தகம் தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பேசினார். இந்நிகழ்வில் புதுப்பட்டி  ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர், வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராசாங்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள் திருஞானம், அறிவழகன், ராஜமாணிக்கம், வீரையன், உதவியாளர்கள் முனியமுத்து, குமார், கணேசன்  ஜோஸ்பின் மேரி, வானவில் மன்ற கருத்தாளர் வசந்தி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக உதவியாளர்கள், கணினி உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி நன்றி கூறினார்.