“எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன்” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணை தான். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வருவாய் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கத்தையும், மாவட்ட, மண்டல அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான சமூக வலைதளப் பயிற்சியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியை 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கினர்.

பின்னர் அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதிதாக தொடங்கப்பட்ட ‘உங்களுடன் உதயநிதி’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இடம்பெற்றன. மேலும், 45 ஆண்டு கால இளைஞரணி செயலபாடுகள் குறித்த குறும்படமும் விழாவில் திரையிடப்பட்டது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி. பிரதமர் மோடி 6 முறை அல்ல ஆயிரம் முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று கூறினேன். அதேபோல தமிழக மக்கள் மக்களவை தேர்தலில் நிரூபித்தனர். இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞரணி நிர்வாகிகள், செயலாளர்களுக்கு எனது நன்றி.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் முக்கியம். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது,” என்று உதயநிதி பேசினார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் அவர் இப்படிப் பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.