பில்கிஸ் பானு வழக்கில் ஜாமீன் கோரிய இருவரின் மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. 2022 ஆகஸ்ட் 15ல் அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் கடந்த ஜன.8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மகாராஷ்டிர அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது.” என்று கூறப்பட்டது.

அதன்படி, அந்த 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இந்த 11 பேரில் இருவரான ராதே ஷியாம் பகவான்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகியோர் விடுதலை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மறுஆய்வு மனு மீது தீர்ப்பு வரும்வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என ராதே ஷியாம் பகவாந்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகிய இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது என்ன மனு?. இது முற்றிலும் தவறானது. ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்துள்ளீர்கள்?. உங்களின் அடிப்படை உரிமை எங்கு பாதிக்கப்பட்டுள்ளது? இந்த மனுவை அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்ய உகந்தது தானா?. உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் மேல்முறையீட்டில் நாங்கள் எப்படி விசாரிப்பது.” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.