தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

“தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது” என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த தீரன் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்கின்றனர். எனவே, 26 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என்றனர். மத்திய அரசு தரப்பில், “தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.